Ads Header

Pages


29 April 2012

"தினம் ஒரு நெல்லிக்கனி, தீர்க்காயுளை அள்ளித்தரும்'

ழைகளின் ஆப்பிள்!


மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் இவற்றைத் தள்ளிப்போட்டு நீண்ட காம் ஆரோக்கியமாக வாழும் வழி என்ன? என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம்.

தமிழ்நாட்டுச் சித்தர்கள் சுருக்கமாக இந்த ஆராய்ச்சியை காயகல்ப ஆராய்ச்சி என்றனர். காயம் என்றால் உடம்பு; கல்பம் என்றால் உடம்பைக் கல் போன்று இறுக வைத்து நீண்ட காலம் வாழவைத்தல். ஆக, காயகல்பம் என்றால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்று அர்த்தம்.

இந்த காயகல்ப ஆராய்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டவர்கள் நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே குமரிகண்டத்தில் வாழ்ந்த அறிவர் என்ற சித்தர்கள் (சித் என்றால் அறிவு: சித்தர் என்றால் அறிவர்) 108 வகையான காயகல்ப மூலிகைகளைச் சாப்பிட்டு காயசித்தி அடைந்து நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்தனராம்.

அத்தகைய 108 காயகல்ப மூலிகைகளும் ஒன்றுதான் கருநெல்லிக்கனி. இந்தக் கருநெல்லிக்கனியைத்தான் கொல்லிமலையை ஆண்ட அதியமான், அவ்வையாருக்குப் பரிசாக அளித்து நீண்டகாலம் தமிழ்ப்பணி ஆற்றுமாறு வேண்டினார்.

நெல்லிக்கனி மூன்று வகைப்படும். ஒன்று கருநெல்லிக்கனி. இரண்டு மலைநெல்லி எனப்படும் பெருநெல்லி. மூன்று அருநெல்லி. இதில் அருநெல்லி என்பது ஊறுகாய் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் உண்பதாகும். நெருநெல்லி எனும் மலைநெல்லியைத்தான் ஏழைகளின் ஆப்பிளள் என்று குறிப்பிட்டேன்.

செழிப்பான கறுப்பான தலைமுடியை வளர்த்துக் காப்பதிலிருந்து மூளை, கண், காது, மூக்கு, தோல், பற்கள், ஈறுகள், தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், இதயம், இதயநாளங்கள். கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், கருப்பை, சிறுநீரகம், மூட்டுக்கள், பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளின் திசுக்களையும் வளர்த்து அவை சீராகச் செயல்படத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொண்டுள்ள ஒரே கனி, நெல்லிக்கனி.

நெல்லியால் நெடும்பகை போகும் என்பது அருமையான பழமொழி ஆகும். நெடும்பகை என்பது உடல் நோய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மார்க்கெட்டுக்கு வரும் நெல்லிக்கனிகளில் (பெருநெல்லி என்று குறிப்பிடுவர். அருநெல்லி என்பது சிறிய நெல்லி. இதனை மருத்துவத்துக்குப் பயன்படுத்தக்கூடாது)

5 லிட்டர் நெல்லிக்கனிகளை வாங்கி அடிபட்டது, அழுகியது, சொத்தை, கரும்புள்ளி உள்ளவற்றை நீக்கிவிட்டு வெந்நீரில் கழுவி நிழலில் உலர்த்தியபின் நீளமான, சுத்தமான பாயில் இவற்றை உலர விடவும். சூரிய ஒளியின் அனல் மட்டும் பட்டால் போதும். பகல் நேர வெயிலில் 10 முதல் 20 நாள் உலர்த்தவும்.

அளவு மெல்ல மெல்லச் சுருங்கி வற்றல் போல் ஆகிவிடும். அதன் பின் உடைத்து உள்ளிருக்கும் விதைகளை நீக்கி, வற்றல்களை மட்டும் சேகரித்துப் பொடி செய்து 1 கிலோவிற்கு 100 கிராம் மிளகு சேர்த்து பத்திரப்படுத்தவும்.

இதனை ஆண்டு முழுவதும் தினசரி அரை ஸ்பூன் (பெரியவர்களுக்கு) கால் ஸ்பூன் (சிறியவர்களுக்கு) காலையில் தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இப்படிச் சாப்பிட்ட பின் 1 மணிநேரத்திற்குத் தண்ணீர் தவிர வேறெதுவும் சாப்பிட வேண்டாம்.

நெல்லிப் பொடியை இப்படிச் சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி; துல்லியமான பார்வை; வழவழப்பான சருமம், கல்போன்ற இறுகிய தசைநார்கள்; படபடப்பற்ற இதயம்; சுறுசுறுப்பான மூளை; சளியற்ற நுரையீரல்; விறுவிறுப்பான நடை கல்லையும் கரைக்கும் கல்லீரல்; வலியற்ற மூட்டுக்கள்; அயராது உழைக்கும் கரங்கள் ஆகியவற்றுடன் சுருங்கக் கூறின் வளமான உடல் நலம் பெறலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக 50ல் முதுமை என்ற நிலையைக் குறைந்தபட்சம் 60ல் முதுமை என்ற அளவிற்குத் தள்ளிப் போடலாம்.

நெல்லிக்கனி என்பது "நல்வாழ்வுக்கனி' என்ற உண்மை. அனுபவத்திலும் அறிவியலிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதியாகியுள்ளது. இதுவே உன்னத காயகல்பம்! இதனைத் தினசரி உண்பவர்கள், கடைகளில் காயகல்ப மருந்து தேடி அலைய வேண்டாம்!

''An apple per day, keeps the doctor away'' என்பது ஆங்கிலப் பழமொழி. "தினம் ஒரு நெல்லிக்கனி, தீர்க்காயுளை அள்ளித்தரும்' என்பது அனுபவமொழி ஆகும்.
------------------------------------------------------------------------------------------------
நெகிழவைக்கும் நெல்லிக்காயின் பயன்? (Gooseberry)
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். இதைவிட நெல்லிக்காய் சாப்பிடுங்க அப்படின்னு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேறெதாவது காரணம் தேவைப்படுமா? இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், மற்ற இயற்கை உணவுகளைப்போல் இல்லாமல் நெல்லிக்காயை சமைத்து உண்டாலும் அதனுடைய சத்து சமைப்பதனால் குறைவதே கிடையாது.

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. மனிதனுடைய ஈரல் இந்த கொழுப்புச் சத்திற்கு அடிப்படையாக அமைவது. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் ‘சி’ இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்துவிடும். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

நெல்லிப்பொடி + சர்க்கரைத் தூள் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரில் கரைத்துப் பருகி வர, உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் நெல்லிப்பொடி + சர்க்கரை + பாகற்காய் பொடி 2 அல்லது 3 முறை ஒரு நாளைக்கு சாப்பிட்டு வர முன்னேற்றம் தெரியும்.

அசிடிடி உள்ளவர்களுக்கும் நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. ஏன் முடி வெள்ளையாக மாறி வருகிறது என்று கவலைப்படுபவர்கள், நெல்லிப்பொடியை ஒரு இரும்புக் கின்னத்தில் போட்டு தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்தால் ஷாம்பு + கண்டிஷனர் + ஹேர்டை தயார்!
-----------------------------------------------------------------------------------------------
நெல்லிக்கனியின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறுவதில் நான் "கொள்கை பரப்புச் செயலாளரா'கவே மாறி விட்டேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நான் நெல்லிக்காய் சாப்பிட்டு வருகிறேன். நல்லது என்ற ஒரே காரணத்தால்; மருத்துவ பலன்களை முழுவதும் அறியாமல்!

அலர்ஜி தொல்லையால் எனக்கு மூச்சிரைப்பு, அடிக்கடி பலவீனமாதல் என்று சின்ன, சின்ன தொல்லைகள் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். இதுவெல்லாம் உங்கள் கட்டுரையைப் படித்த அனைவருக்கும் தெரியும். இது போக, பெண்ணானதால் என்னால் "ஓப்பனாகச்' சொல்ல முடியாத பலன் ஒன்றும் இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ள அனைவரும் கட்டாயம் ஏதேனும் ஒரு வழியில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது மிக, மிக நல்லது - குறிப்பாக ஆண்கள்!

நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து (இரண்டு நெல்லிக்காய்) இருவர் சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், இனிப்பு சேர்க்காமல் சாப்பிடலாம் அல்லது நீராவியில் வேக வைத்து, மிகவும் பொடியாக நறுக்கி, நாட்டுச் சர்க்கரையில் சுக்கு, ஏலம் சேர்த்து நன்கு கிளறி, சுருள பதம் வந்தவுடன் இறக்கி, பிரிட்ஜில் ஆறு மாதம் வரை வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது. தினமும் ஒன்று அல்லது இரண்டு மேஜைக்கரண்டி அளவு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

நான் இதை இத்தனை அக்கறையோடு சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், நம் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின் 10 மி.கி.,க்கும் குறைவு. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில் 3-4 மி.கி., வரை கூடுவது கண் கூடாக நான் கண்ட உண்மை!
மருத்துவமனையில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் உயிருக்குப் போராடி, எமனை பார்த்து விட்டுத் திரும்பி வந்தான் என்றே கூறலாம். வரும்போது ஹீமோகுளோபின் 6 மி.கி., தான். வழக்கம்போல் மருந்து, மாத்திரைகள் மூலம் ஹீமோகுளோபினைக் கூட்ட மிகவும் முயற்சி செய்தனர். பார்க்க வந்தவர்கள் எல்லாம் ஆர்லிக்ஸ், பழங்கள் கொண்டு வர, நான் மட்டும் நெல்லிக்காய் ஜாம் கொண்டு சென்றேன்; மகிமையையும் கூறினேன்.

பதினைந்து நாட்கள் கழித்து தொலைபேசியில் என்னை அழைத்து நன்றி கூறி, "இன்னும் நெல்லிக்காய் ஜாம் செய்து தர முடியுமா? கணிசமான முன்னேற்றம் என் மகனின் உடல்நிலையில்...' என்று கூறினார் நண்பர். ஒரு மாதத்தில் ஹீமோகுளோபின் 11 மி.கி., ஆக கூடி விட்டது. குடும்பமே எனக்கு நன்றி தெரிவித்தது.

அமிர்தத்திற்கும் மேலானது நெல்லிக்கனி என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.
சர்க்கரை வியாதி உள்ள ஆண்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால், "இல்வாழ்க்கை' மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்பது தான் இக்கடிதத்தின் மிகவும் முக்கியக் குறிப்பு!
-சர்க்கரை நோயுள்ள ஆண்களின் தாம்பத்திய வாழ்வில் மீண்டும் உற்சாகத்தை அளிக்கவல்லது நெல்லிக்காய் என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டார் அந்த வாசகி.
***************************************************************************************

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner