Ads Header

Pages


Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

29 April 2013

ஆண்கள் படிக்க வேண்டாம் ! ! ! ! !

ண்கள் படிக்க வேண்டாம் ! ! ! ! !


Posted Image

'என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல...' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய 'நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற 10 விதிகள்...

1. மதியுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்

மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

'ஆண்கள் அழ மாட்டார்கள்' என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்

நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை 'முழுமையானவர்'.

7. பேசுங்கள்

பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் 'பங்கு கொள்ளுங்கள்'

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்

அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது 'வழக்கம்போல்' இருங்கள்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, 'நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்' என்று 'பழைய டயலாக்' பேசுவதில் தவறில்லை.

குறிப்பு : தலைப்பு ஆண்கள் படிக்கத்தான்.... எத்தனை ஆண்கள் படிக்கிறார்கள் என்பதை அறியத்தான்.
Read more

30 October 2012

மரம் வளர்ப்போம் வாருங்கள்!!!

மரம் வளர்ப்போம் !!!

மரம் வளர்ப்போம் வாருங்கள்


மாமழை பெறுவோம் வாருங்கள்

யாகம் வளர்த்தால் மழை வரும் என்ற


மடமையைப் போக்குவோம் வாருங்கள்!

யாகம் வளர்ப்பது மூடத்தனம்


மரம் வளர்ப்பது மூலதனம்

செடி கொடி வளர்த்துப் பாருங்கள்


வெம்மை நீங்கி வாழலாம்!


மக்கள் தொகை பெருக்கத்தால்


காட்டு வளங்கள் அழிகின்றன


காட்டு வளங்கள் அழிவதால்


கானல் வெப்பம் அதிகரிக்கும்!


வெப்பம் உலகில் அதிகரித்தால்


வேண்டா விளைவுகள் ஏற்படுமே


மழை நீர் மறைந்து போகும்


மனித இனம் அழிந்து போகும்!

வனவிலங்குகள் மாண்டு போகும்

புல் பூண்டுகள் தொலைந்து போகும்


பூமிப் பந்து நெருப்பாகும்

வேண்டாம் இந்த விபரீதம்!


புவியின் வெப்பம் தணிக்கவே

பூமியெங்கும் மரம் நடுவோம்


மழை வளம் காக்கவும்

மனித வளம் காக்கவும்


மரம் வளர்ப்போம் வாருங்கள்!
Read more

28 October 2012

மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!!

மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!!

"விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. "புவி வெப்பமயமாதல்" (Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என அறிவியலாளர்கள் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் சராசரி மனிதனோ இதைப் பற்றிய எந்த கவலையும், விழிப்புணர்வும் இன்றி சொந்த வீடான பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான்.

குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசுபடுத்துவதில் மனிதனுக்கு நிகர் யாரும் இல்லை.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் இடையறாது உமிழப்பட்டுக் கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடு போன்ற விஷ வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு விண்வெளிக்குச் சென்று காற்று மண்டலத்தில் கலக்கும்.

இது ஒரு போர்வை போல் பூமியைச் சுற்றி மூடிக் கொண்டு மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது. பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்குத் தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. நாம் மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதால் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மரங்களின் அவசியம் தற்போது, உலகை உலுக்கி வரும் பிரச்சினைகளில் சுற்றுப்புற சூழல் மாசடைதல் என்பது மிக முக்கியமானது. இதன் காரணமாகவே பூமி வெப்பமடைகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, நெடுங்காலத் தீர்வாக மரங்கள் நடவேண்டும் என்பதை அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம்.

இருக்கின்ற மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக, வெட்டிச்சாய்த்து வருகிறோம். ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக ஐந்து மரங்களையாவது நட வேண்டும். ஒரு சின்ன இலை வளர அந்த மரம் எடுக்கும் முயற்சி மிக அசாதாரணமானது.
நம்முடைய வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், குளிர்சாதனப் பயன்பாடு மிகவும் குறையும். மின்கட்டணம் குறையும். குளுமையான வேப்பமரத்துக் காற்று யாருக்குத்தான் பிடிக்காது?

மரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும், கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை பெரிய அளவில் குறைக்கின்றன.
மரங்களால் மழை பெய்யும், நீர்வளம் பெருகும், நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும். புவி வெப்ப அளவு உயர்வால் ஏற்படும் விளைவுகள் புவி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இதய நோய் சுவாச நோய்கள் மேலும் தீவிரமடைகிறது. அதிக வெப்பம் காரணம் பலரும் வெப்பத் தாக்குதலுக்குள்ளாகி மடிவதைக் காண்கிறோம்.

காற்று மண்டலத்தின் தாழ்வடுக்குகளில் ஓசோன் செறிவு அதிகரிக்கச் செய்கிறது. இது சுவாசப் பாதிப்பையும், நுரையீரல் பாதிப்பையும் உருவாக்குகிறது. ஆஸ்த்துமா நோயை மேலும் தீவிரமடைய செய்கின்றது. அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடும், அதிக வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது. அதற்குப் போட்டியாக மனிதனே விவசாய நிலங்களை கான்கிரீட் போட்டு மூடி விடுகிறான். இந்த பூமியின் மேற்பரப்பு எங்கும் ஏற்படும் வெப்ப உயர்வால் நீண்ட வறட்சியும் தண்ணீர் பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படும். பாலங்கள், ரோடுகள் போன்ற கட்டுமானங்கள் வெப்பத் தாக்குதல்களால் வலுவிழந்து அதன் பராமரிப்பு செலவு அதிகமாகி விடும். கடல் மட்டம் உயரும். பெரும்பாலான பெரிய வியாபார நகரங்கள் எல்லாம் கடற்கரையிலே உள்ளன. கடல் மட்டம் உயர்வதால் பல பெரும் நகரங்கள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. வான் மழை பொய்க்கும். துருவங்களின் பெரும் பனிக்கட்டிகள் உருகி மிகப்பெரும் வெள்ளச் சேதங்களையும், புவியியல் பாதிப்புகளையும் உருவாக்கும்.

அப்படி ஒரு அபாயம் இப்போது நம் தலைக்கு மேல் கத்தியாக இருக்கிறது.
இன்றைய தலைமுறையினரின் கடமை இன்றைய தலைமுறை இப்போது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். செடிகொடிகள் வளர்ப்பதிலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று முயற்சிப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தற்போது வளர்ந்து இருக்கும் மரங்களை பாதுகாப்பதிலும் நம்மைவிட இன்றைய தலைமுறையினர் துடிப்புடன் இருக்கிறார்கள்.
மலைப் பிரதேசங்களில், மரங்களை வெட்டிச் சாய்த்து அடுக்கு மாடி குடியிருப்புகள், உல்லாசக் குடியிருப்பு போன்றவற்றை கட்டுவதன் மூலம், அங்கே நிலத்தின் பிடிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இது கண்டிப்பாய் தடுக்கப்பட வேண்டும்.

சென்ற மழையின் போது, ஊட்டியில் நடந்த நிலச்சரிவு பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான இடங்கள் கூட இப்போது வெப்பமடைந்து வருகின்றன. ஊருக்கே குளிர்சாதன வசதி செய்தது போல் இருந்த இடங்களில் இப்போது குளிர்சாதன வசதியுடன் தங்குமிடங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன விஷயம்... குளிர்சாதனங்கள் குளிரூட்டுவதற்காக வேலை செய்யும் போது வெளிவிடும் நச்சு வாயு, சுற்றுப்புறச் சூழலை வெப்பமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைப் போன்ற சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உறைகளால் நிகழும் சுற்றுப்புறச் சீர்கேட்டையும் இளையோர்கள் கண்டிப்பாய் தடுத்திடல் வேண்டும்.
மழை நீர் சேமிப்பு தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும், கனமழை. ஆனால் இந்த மழை நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவற்றைத் தேக்கி வைக்கும் ஏரிகள் இன்று தூர்ந்து போய்விட்டன. அல்லது வீட்டுமனைகளாகவும், போக்குவரத்துப் பணிமனைகளாகவும், புதிய பேருந்து நிலையங்களாகவும் மாறிவிட்டன. ஏரிகளுக்கு மழை நீரை கொண்டு வரும் வாய்க்கால்கள் சரியாக பராமரிக்கப் படாமல் இருப்பதால் ஏரிகள் நிரம்புவதில்லை. இதனால் விலைமதிப்பற்ற மழை நீர் வீணாகிறது. மழை நீர் கடலில் சேர்ந்தால் யாருக்கு நன்மை?

அதை மண்ணுக்குள் சேர்த்தால் நம் அனைவருக்கும் நன்மை. இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து வேளாண் உற்பத்தி பெருகும். நம் குடிநீர் பஞ்சமும் தீரும்
மழை நீர் சேமிப்பால் கீழ்க்காணும் நன்மைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. நீர் பற்றாகுறை குறைகிறது. நீரின் கார அமில (PH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.

விவசாய நிலங்களில் மண்அரிப்பைத் தடுக்கிறது.
நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் செலவு குறைகிறது. மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெற உதவுகிறது. மழைநீர் சேமிப்பு பகுதியின் அருகிலுள்ள மரங்கள் மிக விரைவில் வளர்கின்றன. நகர்ப் புறங்களில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் காத்து சாலை போக்குவரத்தை தடையின்றி நடைபெற உதவுகிறது. நகர்ப் புறங்களில் நிறைய இடங்களில் நீர் தேங்குவதை தடுத்து நோய்கள் பரவுவதை தடுக்கின்றது.

சென்னை மாநகரில், 1,800 சதுர அடி கட்டட மேற்பரப்பு (அல்லது மொட்டைமாடி) உள்ள வீட்டில் மழைநீர்த் தொட்டியைப் பெரியதாகத் தரைக்குக் கீழே அமைக்க முடிந்தால், தற்போது பெய்யும் மழையளவுப்படி 58 நாளில் 1,00,800 லிட்டர் மழை நீரைச் சேமிக்க முடியும். இந்த நீர் தூய்மையானது. 6 நபர்கள் உள்ள ஒரு குடும்பம், இந்த நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். தற்போது சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 2 லிட்டர் நீரின் விலை குறைந்தபட்சம் இருபத்தி ஐந்து ரூபாய். அப்படியானால் இந்த மழை நீரில் பாதியைச் சேமிக்க முடிந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் பல லட்சம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும்.


பசுமை இல்லா பூமி பாலைவனம் மழை பெய்யவில்லை, ஆகவே விவசாயம் செய்ய முடியவில்லை என்றஅங்கலாய்ப்பையும் நிறையவே கேட்டு வருகிறோம். இதற்கு காரணம் நாம்தான். மரங்கள் வெட்டப்பட்டு விளை நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிது புதிதாக பல நகர்கள் இரவோடு இரவாக முளைத்து வருகின்றன. நீர்நிலையுள்ள இடங்களில் கூட இது பரவி வருவது பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டால், உணவுக்கு... வீடுகளின் மொட்டைமாடிகளில் காய்கறி செடிகள், பூஞ்செடிகளை பயிரிட வேண்டிய நிலை ஏற்படும். நம்முடைய சந்ததியினருக்கு எத்தகைய உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம்? எல்லா இயற்கைச் செல்வங்களையும் சுரண்டிய பின்னர், அவர்களுக்கென்று என்ன மீதம் விட்டு வைக்கப் போகிறோம்?

பசுமையைப் பறிகொடுத்து விட்டுப் பாலைவனமாய் நிற்கும் பூமியைத்தான் மீதம் வைக்க முடியும்.
மரம் தரும் பலன்கள் மலர்கள், காய், கனிகள் தருகிறது. நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது. காற்றை சுத்தப்படுத்துகிறது. நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது. மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

1. ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.


2. ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.

3. ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.


4. ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.


ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.


மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும்.

அந்த பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.

ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.
மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்" என்கிறது குறள். "பெருந்தன்மை உள்ளவனிடத்தில் உள்ள செல்வம்; அனைத்து பாகங்களையும் மருந்தாய் தரும் மரத்திற்கு ஒப்பாகும்" என்று மரத்திற்கு பெருமை சேர்க்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்!

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கில் முதலிடமும், புங்க மரம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆற்றலும் காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் ஆற்றலும், அத்துடன் காற்றில் கலந்துள்ள Anthro cyanine என்னும் நச்சு வாயுவை ஈர்த்துக்கொள்ளும் (கொல்லும்) ஆற்றலும் உள்ளடக்கிய மரமான வேம்பு
தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும் நெல்லி உடலுக்கு முறுக்கு தந்திடும் முருங்கை காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளித்து, விஷத்தை முறித்து, வாய் புண்ணை ஆற்றும் எலுமிச்சை நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தி விடும் கடுக்காய் சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படும் வில்வம். கண் பார்வைக் கோளாறுகளுக்கும், எலும்புகள் பலமடையவும், புண்கள் விரைவில் ஆறவும் உதவும் கருவேப்பிலை குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையான பழத்தினை தரும் நாவல் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கும் அத்தி பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படும் ஆலமரம் உடலில் இருக்கும் தேவையற்ற ரசாயன நஞ்சை நீக்கும் நல்ல மருந்து அகத்தி மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டதும் . .

18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றுள்ள மரமான அவுரி
என்று எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டு மனித சமுதாயம் நோயற்று வாழ்வதற்கு ஒருதாயைப்போல ஏராளமான மரங்கள் உதவுகின்றன. மரங்கள், காய்களாகவும், கனிகளாகவும், கீரை வகைகள் என்றும் மனிதனுக்கு பலவழிகளில் உணவைத் தருகின்றன. இவைகள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடையாக விளங்குகின்றன. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான சுவைமிகுந்த உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.

வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். அந்த நேரத்தை பயனுள்ளதாக்க வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.


மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.


மரங்களே மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.
மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும் போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. கோடையில் வெப்பக் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.
உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக - எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரங்களை பேணுவோம்! மனிதராய் மாறுவோம்!
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் வளத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இயற்கை நமக்கு கொடையாக வழங்கியுள்ள மரம் செடிகளை நிறைய வளர்க்க வேண்டும். மரம் செடிகள் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனால் சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தாவரங்களின் சேவை நமக்கு தேவைப்படுகிறது. நமக்கு சொந்த வீடோ, வாடகை வீடோ இருக்கட்டும், நம் வீட்டை சுற்றி நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவோம். சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு பங்காற்றிட உறுதி கொள்வோம்!
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! வளம் அடைவோம்!
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner