Ads Header

Pages


30 April 2012

கொய்யாப் பழங்களின் பயன்கள்!

பழவகைகளில், கொய்யா தனிச் சிறப்புடையது. இதன் தாயகம் மத்திய ஆசியா ஆகும். போர்த்துக்கீசியர்கள் கொய்யாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். தாவர வகையில் சிறிய மரவகையைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் ‘‘பிசிடியம் கௌஜவா’’ ஆங்கிலத்தில், ‘‘கௌவா’’ (Guava) என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலப் பெயரின் அடிப்படையிலேயே, தமிழில் ‘‘கொய்யா’’ என்று பெயர் வந்தது. வருடம் முழுதும் கிடைக்கும் பழம்.

இந்தியாவில் கொய்யா 1,35,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. முக்கியமாக, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அதிகமாக சாகுபடியாகிறது.

வெப்ப நாடுகளின் ஆப்பிள்:

கொய்யா பழத்திற்கு, ‘‘வெப்ப நாடுகளின் ஆப்பிள்’’ என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. வெப்ப நாடுகளின் முக்கிய கனி என்பதாலும், சத்துக்கள் அதிகம் கொண்டதாலும் இப்பெயர். கொய்யாவை, ‘‘ஏழைகளின் பழம்’’ (Poorman’s fruit) என்றும் சொல்வார்கள்.

வகைகள்:

கொய்யாவில் பல ரகங்கள் உண்டு. பொதுவாக, சதையின் நிறம், பழத்திலுள்ள விதை அளவு, பழத்தின் உருவ அமைப்பு முதலியவைகளில் மாறுபடும். சதையின் நிறம் சிவப்பு அல்லது வெள்ளையாக இருக்கும். பெரிய அளவு கொய்யாவில் விதைகள் குறைவாக இருப்பதோடு, சுவை மிகுதியாக, நல்ல இனிப்பாக இருக்கும். இதைத்தான் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவர். விதைகள் இல்லாத, பருமனான கொய்யா வகையும் உண்டு. இது நல்ல இனிப்புள்ளது, சதை அதிகம் கொண்டது.

சத்துப் பொருள்கள்:

நாம் உண்ணும் 100 கிராம் கொய்யாப் பழத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருள்கள்: புரதம் 1 கிராம், கொழுப்பு 0.30 கிராம், நார்ப்பொருள் 5.40 கிராம், மாவுப்பொருள் 11.6 கிராம், கால்சியம் 10 மில்லிகிராம், பான் பிரஸ் 28 மி.கி. இரும்புச் சத்து 104 ;மி வைட்டமின் ‘‘சி’’ 232 மி.கி. என்ற அளவிலும், வைட்டமின் ‘‘ஏ’’, வைட்டமின் ‘‘பி’’ சத்துக்களும், பெக்டினும் கணிசமாக உள்ளன.

வைட்டமின் ‘சி’ சுரங்கம்: கொய்யாப் பழத்தில், வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தைவிட ஏழு மடங்கும்; எலுமிச்சம் பழத்தைவிட மூன்றரை மடங்கும் அதிகமாக உள்ளது. இதனால் கொய்யாப்பழத்தை வைட்டமின் ‘‘சி’’ சுரங்கம், என்று சொல்கிறார்கள்.

கொய்யா பற்றிய புது மொழிகள்:

கொய்யாவை கடித்துத்தின்னா, பலன் அதிகம் பைய்யா!

அய்யா, அய்யா, அருமை மலமிளக்கி கொய்யா!

‘‘வானவில்’’ இயற்கை அழகரங்கம், ‘‘கொய்யா’’, வைட்டமின் ‘‘சி’’ சுரங்கம்!

கொய்யா நரம்புகளை வலுப்படுத்தும் மெய்யாய்!

முக்கிய குறிப்பு:

கொய்யாப்பழத்தை நன்கு கழுவி, சுத்தம் செய்து, தோலுடன் கடித்துச் சாப்பிட்டால்தான் கொய்யாப்பழத்தின் முழுச்சத்துக்களும் நமது உடலுக்குக் கிடைக்கும். குறிப்பாக, வைட்டமின் ‘சி’ சத்து தோலில்தான் மிகுதியாக உள்ளது. சதைப் பகுதியின் உள்ளே போகப் போக வைட்டமின் ‘சி’ சத்தின் அளவு குறைகிறது என உணவியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

பொதுப்பயன்கள்:

கொய்யாப்பழத்தை பொதுவாக கடித்துச் சாப்பிடுகிறோம் அல்லது துண்டுகளாக நறுக்கிச் சாப்பிடுகிறோம். கொய்யாப் பழத்தை பக்குவம் செய்து, கூழ், ஜெல்லி, சிரப், பேஸ்ட், பாலேடு, கொய்யா முரப்பா, ஜாம், முதலியன தயாரித்து பல வழிகளில் உண்ணலாம். கொய்யாப்பழம் பல மருத்துவக் குணங்கள் கொண்டது. சளித்தொல்லை வராது காக்கும் அற்புத குணம் கொய்யாப் பழத்திற்கு முக்கியமாக உண்டு.

குடல் கோளாறுகளை நீக்கும். இரத்த விருத்தி ஏற்படுத்தும், இதயத்தைச் சீராக இயங்கச் செய்யும். தூக்கத்தைத் தூண்டும். சிறந்த சிறுநீர் பெருக்கி. ஈறு, பற்களைப் பலப்படுத்தும். நரம்புகளை வலுப்படுத்தும். உடலுக்குக் குளிர்ச்சி ஊட்டும். மலமிளக்கி. தோல் நோய்களுக்கு மாமருந்து. விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

மருத்துவப் பயன்கள்:

கொய்யாப்பழத்தில், அதிக அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால் இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சளிப் பிடிக்காது காக்கும் தன்மை உள்ளது.

சிறுகுடல், பெருங்குடல் சம்பந்தமான கோளாறு உள்ளவர்கள், கொய்யாப்பழத்தைத் தின்று வர, நன்கு குணம் கிடைக்கும். கொய்யாப்பழத்திலுள்ள பெக்டின் சத்தும், வைட்டமின் ‘சி’ சத்தும்தான் இந்தக் குணத்திற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அனீமியா என்னும் இரத்த சோகை உள்ளவர்கள், கொய்யாப்பழத்தைக் கூழ் செய்து குடித்து வர, இரத்தவிருத்தி ஏற்படும். சோகை நோய் நீங்கி, நலன் பயக்கும். இதயத்தைச் சீராக இயங்கச் செய்யும் தன்மையும் கொய்யாப்பழத்திற்கு உண்டு.

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள், தினமும் படுக்கைக்குச் செல்லுவதற்கு முன், ஒரு தம்ளர் கொய்யாப்பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து பருகினால் நன்கு தூக்கம் வரும்.

கொய்யாப்பழத்தை கடித்துத் தின்று, ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் குடித்தால், சிறுநீர் நன்கு பிரியும். சிறுநீர் தாரையிலுள்ள எரிச்சல் நீங்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு கொய்யா ஒரு இயற்கை நல் மருந்து.

விந்து உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொய்யாப் பழத்திற்கு உண்டு. செலவு மிகக் குறைவான சிக்கன மருத்துவம் இது.

கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைத் தனிக்க, கொய்யா பழக்கூழ் பருகினால் போதும்.

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கொய்யாப் பழம் நல்ல பழம். பெரியவர்களுக்கு எலும்பை வலுப்படுத்தும்.

கொய்யாப்பழத்துடன், ஒரு செவ்வாழைப்பழம் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்குபடும்.

கொய்யா பழத்தின் சதைப்பாகத்தை நன்கு பிசைந்து, காய்ச்சிய பசும் பாலில் கலந்து கொடுத்துவர, குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாகத் திகழ்வர். நன்கு சுறுசுறுப்பு தானே வரும்.

கொய்யாப்பழம், ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஈறு மற்றும் பற்களைப் வலுப்படுத்தும்.

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தொடர்ந்து கொய்யாப் பழச்சாறுடன் திராட்சைப் பழச்சாறு கலந்து பருகிவர, நரம்புகள் பலப்படும். பக்கவிளைவில்லா இயற்கை மருந்து இது.

கொய்யாப் பழக்கூழ் குடித்துவர, சொறி, சிரங்கு குணமாகும். சரும நோய் வராது பாதுகாக்கும். மேனியை பளபளப்பாக வைக்கும் தன்மை கொய்யாப் பழத்திற்கு உண்டு.

கொய்யாப் பழக்கூழுடன், எலும்மிச்சம் பழச்சாறு, இஞ்சிச் சாறு சேர்த்து பருகினால், பித்தம் விலகி நலன் பயக்கும்.

காக்கா வலிப்பு உள்ளவர்கள், கொய்யாப் பழக் கூழ் சாப்பிட்டு வர, நோயின் தன்மை கட்டுக்குள் இருக்கும்.

பசி, ருசி இல்லாதவர்கள், கொய்யாப் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடித்தால், ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்கு பசி ருசி உண்டாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner