Ads Header

Pages


21 May 2012

நொச்சி மூலிகையின் பயன்கள்! மூலிகை மருத்துவம்!

மூலிகை மருத்துவம்

பூமியிலுள்ள அனைத்து தாவரங்களும் ஒவ்வொரு வகையில் நமக்குப் பயன்களை அளிக்கின்றன.இவைகள் நமது வாழ்வோடு ஒன்றிவிட்டன. இவைகளின் பயன்களை அறிந்து முறையாகப் பயன்படுத்தினால், நமது நோய்களைக் குணப்படுத்தி ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ளலாம். நொச்சி என்பது, ஒரு சிறந்த மூலிகைச் செடியாகும். இங்கு இந்த மூலிகையின் பயன்கள் பற்றிக் காணலாம்.

நொச்சியானது இந்தியா முழுவதும் பரவலாக வளரக்கூடிய ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகும். வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனமூவகை நொச்சிகளை மருத்துவ நூல் உரைக்கிறது. அதிகமாகக் காணப்படுவது வெண்நொச்சியாகும். நீர் நிலைகளுக்கு அருகில் முக்கியமாக ஆற்றங்கரையோரம் நீர்நொச்சி வளர்கிறது. கருநொச்சி அதிகமாகக் காணப்படுவதில்லை. இங்கு வெண்நொச்சி பற்றிக் காணலாம்.

பல்வேறு மொழிப் பெயர்கள்
ஆங்கிலம் பைன் லீவ்ட் சேஸ் ட்ரீ
இந்தி _ நிசிந்தா
தெலுங்கு _ வவிலி
மியான்மர் _ கியான்_பான்பின்
மலையாளம் _ இந்த்ராணி
சமஸ்கிருதம் _ சேபாலிகா
கன்னடம்_ பைல்_நெக்கி
மகாராஷ்டிரம் _ நீர்குண்டா
பஞ்சாப் _ மார்வான்
வங்காளம் _ சாமாலு
பெர்சியன்_பஜன்குசட்
பிரெஞ்சு _ கட்டிலியர் இன்சிஸ்
குஜராத் _ நகோடா

இதன் தாவரவியல் பெயர் ‘‘விட்டக்ஸ் நெகுண்டா’’ என்பதாகும். இது ‘வெர்பபோசியே’ என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?

இவைகளைப் பிழிந்து சாறு எடுத்துப் பயன்படுத்தலாம். இலைகளை நீரிலிட்டு கஷாயமாகப் பயன்படுத்தலாம். பூக்களை கஷாயமாக்கலாம். வேர்களைக் குடிநீராக்கி பயன்படுத்தலாம்.

குணங்கள்

கோழையகற்றி, புழுவகற்றி, உடல்தேற்றி, வலிநீக்கி, வியர்வை உண்டாக்கி சுரம் நீக்கி.

மருத்துவப் பயன்கள்

நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.

நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.

நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.

நொச்சி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, மிளகுத்தூள் 1 கிராம், சிறிது நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்து, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். (இச்சா பத்தியத்துடன், பாகற்காய், அகத்தி, மீன், கருவாடு நீக்கி உணவு உட்கொண்டு தீவிர ஆசையைத் தவிர்க்க வேண்டும்).

நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.

நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.

நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.

நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.

இவைகளை பிழிந்து சாறு எடுத்து அரை அவுன்சு சாறில். ஒரு ஸ்பூன் நெய் கலந்து நான்கு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து மூட்டுவலி, இடுப்பு வலியில் பூசிட வலி மாறும்.

இலைகளை அரைத்து மூட்டுவலி மேல் கட்டிவர, மூட்டுவலி வீக்கம் மறையும்.

வேர்களை நீரிலிட்டுக் காய்த்து வெறும் வயிற்றில் ஒரு அவுன்சு அருந்த வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.

இலைகளை நெருப்பில் வதக்கி வீக்கம் மேல் கட்ட, வலி தீரும். வீக்கம் வடியும்.

கைப்பிடி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு சேர்த்தரைத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி மாறும்.

சுடுநீரில் இலைகளைப் போட்டு ஆவிபிடிக்க காய்ச்சல், தலைபாரம், சளிக்கட்டு மாறும்.

இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும்.

வேர்ப்பட்டையை உலர வைத்து இடித்து பொடியாக்கி சிட்டிகை பொடியை தேனில் குழைத்து வாரம் இருமுறை காலையில் தின்றுவர நரம்புவலி வாதப்பிடிப்பு குணமாகும்.

வேப்பெண்ணெயை சட்டியில் ஊற்றி சூடாகியபின் கைப்பிடி இலைகளை இட்டு வதக்கி, வீக்கத்தின் மேல் வைத்துக் கட்ட வீக்கம் குறையும்.

பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும்.

நீரில் இலைகளையும், பூக்களையும் இட்டு சூடாக்கி, குளித்துவர தலைநீர், தலைபாரம், தலைவலி, ஜலதோஷம், உடல்வலி மாறும்.

இலைகள், பூக்களை மணலில் இட்டு வறுத்து, லேசான சூட்டில் கழுத்துப் பிடரி வலி ஏற்படும் போது ஒற்றடம் கொடுக்க வலி மாறும்.

சமஅளவு நொச்சி இலைச்சாறு, நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து குளித்துவர கழுத்தில் ஏற்படும் வீக்கம், நெறிக்கட்டு குணமாகும்.

நொச்சி இலைகளை ஒரு துணியில் தலையணை போல் அடைத்து தலைக்கு வைத்துத் தூங்கி வர, தலைவலி, நரம்புவலி, கழுத்து வலி, தலைநீர், தலைபாரம் இவைகள் குணமாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner