Ads Header

Pages


17 March 2012

இஞ்சிக்கு மிஞ்சினது எதுவுமே இல்ல ! வயித்துக் கோளாறுகளை விரட்டியடிக்கணுமா..? வழிமுறை இதோ...

இஞ்சிக்கு மிஞ்சினது எதுவுமே இல்ல ! வயித்துக் கோளாறுகளை விரட்டியடிக்கணுமா..? வழிமுறை இதோ...

நொறுங்க தின்னா... நூறு வயசு'னு சொலவடை சொல்லுவாங்க ஊரு காட்டுல. ஆனா, நுனிப்புல் மேயுறது கணக்கா கண்டதையும் அரைச்சிட்டு, வேலை அவசரத்துல ஓடறவங்கதான் இப்பல்லாம் ஜாஸ்தி. அதனால... ஜீரணக்கோளாறு, வயித்து உப்புசம்னு அன்னாடம் ஏதாச்சும் ஒண்ணு புறப்பட்டு நின்னு ஆளை ஆட்டிப்படைக்குது. அதையெல்லாம் விரட்டியடிக்கற வழிமுறைகளை பார்ப்போம்.

ஆறு மாசத்துல இருந்து மூணு வயசு வரை உள்ள கொழந்தைங்களுக்கான வைத்தியம்...


கால் ஸ்பூன் ஓமம் எடுத்துக்கோங்க. அதை ஒரு சட்டியில போட்டு வெடிக்கிற வரைக்கும் நல்லா வறுங்க. பிறகு, கால் டம்ளர் தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. தண்ணி நல்லா சுண்டி ஒரு பாலாடை (சங்கு என்றும் கூறுவார்கள்) அளவு வந்ததும் இறக்கி வச்சுருங்க. அதை கொழந்தைங்களுக்கு கொடுத்தீங்கனா... வயித்து உப்புசம், பசியில்லாம வயிறு மொத்து மொத்துனு இருக்கறது, எப்பப் பாத்தாலும் அழுதுகிட்டே இருக்கறது மாதிரியான எல்லா பிரச்னைகளும் சரியாயிரும். சில பிள்ளைக தண்ணி தண்ணியா வெளிக்கு போகும். அதுவும்கூட இந்த வைத்தியத்துக்கு கட்டுப்படும்.

பேய்மிரட்டி இலை - 4, சீரகம் - கால் ஸ்பூன்... இது ரெண்டையும் ராத்திரியே ஒரு சட்டியில போட்டு, அரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வைங்க. மறுநாள் காலை யில எடுத்து பிழிஞ்சி, ஒரு பாலாடை அளவு கொழந்தைங்களுக்கு கொடுத்தா... வயிறு சம்பந்தமான பிரச்னையெல்லாம் பட்டுனு காணாம போகும்.

அடுத்தது, பெரியவங்களுக்கான வைத்தியம்...



இஞ்சித் துவையல். இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா, அதோட மகத்துவம் இருக்கே... அதுதான் பலபேருக்கு தெரியாது. வயிறு சம்பந்தமான பிரச்னைனா... அதுக்கு மிஞ்சின வைத்தியம் எதுவும் இல்லைனே சொல்லலாம். இஞ்சியோட தோலை சுத்தமா எடுத்துட்டு, நல்லெண்ணெய் விட்டு வதக்கி புளி, உப்பு, காஞ்ச மிளகாய், வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைச்சி சாப்பிடுங்க, செரிமானக்கோளாறெல்லாம் காத்தா பறந்துரும்.

பிரண்டைத்தண்டு. நல்ல இளந்தண்டா 10 கணு எடுத்துக்கோங்க. அதை நல்லெண்ணெய் விட்டு வதக்கி... புளி, உப்பு, காஞ்ச மிளகாய், வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைச்சி சாப்பிட்டீங்கனாலும் கோளாறு போயே போயிரும். அதுமட்டுமில்ல... சாப்பாடும் கூட கொஞ்சம் இழுக்கும்.

வயித்து உப்புசம், திடீர் வயித்துவலினு சிலர் படாத பாடுபடுவாங்க. உடனே ஒரு கைப்பிடி முருங்கை இலையை உருவுங்க, காம்பெல்லாம் தள்ளிட்டு... கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நல்லா கசக்குங்க. அதுல வர்ற சாறை அப்பிடியே குடிச்சிருங்க. கசக்குறப்ப கைவிரல் நடுவுல வடிஞ்சிருக்கற சாறை வயித்துல தடவுங்க, வயித்துவலி வந்த வழியைப் பாத்து ஓடியே போயிரும் ஓடி!
-----------------------------------------------------------------
இஞ்சிக் குழம்பு
தேவையானவை: புளி - 2 எலுமிச்சம்பழம் அளவு உருண்டை, இளசான இஞ்சி - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம், தேங்காய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய கட்டி, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியைக் கழுவி தோல் சீவி, பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். புளியை வெந்நீரில் ஊறப் போடவும்.



கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துண்டுகளை வதக்கி எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவலை வறுத்து எடுத்து, அதே கடாயில் காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். வறுத்த மிளகாய், வெந்தயம், தேங்காய் துருவல்... இந்த மூன்றையும் மிக்ஸியில் அரைக்கவும். சிறிது எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.

புளியைத் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம், வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வதக்கிய இஞ்சித் துண்டுகள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் மேலும் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

அஜீரணம், பித்தத்துக்கு ஏற்ற குழம்பு இது.
--------------------------------------------------------------------------------------
இஞ்சிசட்னி

அஜீரணம்,வாய்வுத் தொல்லைகளால் சிரமப்படுபவர்களுக்கு ஏற்ற உணவு

தேவையான பொருட்கள்
இஞ்சி 1 நடுவிரல் அளவு
பெருங்காயம்-சிறிதளவு
கடலைப்பறுப்பு-ஒரு டேபிள்ஸ்பூன்
புளி -நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிள்காய்-மூன்று
கடுகு,கறிவேப்பிலை-தாளிப்பதற்கு

செய்முறை
முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
இஞ்சி,கடுகு,கறிவேப்பிலை தவிர எல்லாவற்றையும் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு மிக்சியில் போட்டு மசியாக உப்பு சேர்த்துஅரைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி கடுகு,கறிவேப்பிலை போட்டுத்தாளித்துக் கரைத்து வைத்துள்ள சட்னியை அதில் ஊற்றவும். கொதி வந்தவுடன் இறக்கவும்.
இட்லி,தோசைக்கு மிகவும் ஏற்றது.
இட்லி மாவுப்பதத்தில் சட்னியும் இருக்கும்.


----------------------------------------------------------------------------------
மிக்சட் ஃப்ளவர் சூப்
தேவையானவை: முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப் பூ - தலா அரை கப், பாசிப் பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், சுத்தம் செய்த முருங்கைப்பூ, ஆவாரம் பூ, செம்பருத்திப்பூ சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

அல்சர் நோயாளிக்கு ஏற்ற அற்புத சூப் இது.
--------------------------------------------------------------------------
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா

தேவையானவை: சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2, பெரிய பீட்ரூட் - 1, சோயா மாவு - 2 டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ஓமம், காய்ந்த மிளகாய்-தனியா இரண்டையும் வறுத்து அரைத்த பொடி - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசிக்கவும். பீட்ரூட்டைத் தோல் நீக்கி சீவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோயா மாவு, மசித்த கிழங்கு, சீவிய பீட்ரூட், ஓமம், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்-தனியாத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சிறிது தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையவும். இதை அரை மணி நேரம் ஊற விடவும். மாவு மிருதுவாகிவிடும்.



இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் இட்டு, சிறிது எண்ணெய் தடவி மடித்து, கொஞ்சம் கனமாக இடவும். தோசைக் கல்லில் சப்பாத்தியைப் போட்டு இருபக்கமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

டொமேடோ கெட்சப் (அ) வெள்ளரி-வெங்காயப் பச்சடியுடன் பரிமாறலாம்
--------------------------------------------------------------------------------------------

உணவே மருந்து
-இஞ்சி


நோயற்ற வாழ்விற்கு உணவு சீர்திருத்தமே சிறந்த வழி. இன்று உலகமயமாக்கல் கொள்கையால் பல கவர்ச்சிகரமான வெளிநாட்டு உணவகங்கள் நம் நாட்டில் தோன்ற ஆரம்பித்துள்ளது. துரித உணவகங்கள் அதிகரித்துள்ளன. சென்ற தலைமுறையில் இல் லாத வாழ்வியல் நோய்கள் நம்மிடம் அதிகரித்திருப்பதற்கு காரணம் தவறான உணவு பழக் கங்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நோயை தவிர்ப்பது என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நம் நாட்டு பாரம்பரிய மருத்துவமுறை முதல், மேற்கத்திய மருத்துவ மேதை ஹிப்பாக்கரிட்டிஸ் வரை உணவே மருந்து, மருந்தே உணவு என்ற உயர்ந்த கொள்கையை வலியுறுத்தி உள்ளனர்.

மனிதன் உயிர் வாழ தேவையான மிக முக்கியமான ஒன்று உணவு. தொழில் புரிவதற்கு சக்தியை கொடுக்கவும், உடலை நிலை பெற செய்யவும் உணவு மிக அவசியம். திருவள்ளூவர் உணவை பற்றி ஓர் அதிகாரத்தையே இயற்றி உள்ளார். உணவில் ஏற்படும் குற்றங்கள்தான் நோய் தோன்றுவதற்கான மிக முக்கிய காரணம். உணவு வல்லுனர்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, என உணவை உயிர் வேதியியல் தொகுதியாக பார்க்கிறார்கள். தினசரி உணவில் ஒவ்வொரு பொருளிலும் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து சரிவிகித உணவு என்ற கொள்கையை பரிந்துரைக்கிறார்கள். நம் நாட்டு பாரம் பரிய மருத்துவ முறை உணவு என்பது நமது மனித உடலுக்கு தேவையான சக்தியை தரும் பொருள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. நோய் தீர்க்கும் குணத்தை அளிக் கக் கூடிய உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது நம் உணவே நமக்கு மருந் தாகிறது. உணவே நம் நோய்க்கு சிகிச்சை ஆகிறது.

சென்ற தலைமுறையில் பெண்கள் எல்லா வகையான சுவை களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அகத்திகீரை, பாகற்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ, வேப்பம் கொழுந்து மற்றும் பல மருத்துவ குணம் வாய்ந்த கீரை, காய் கனிகள், பூக்களை உண வில் சேர்த்து வந்தனர். உணவே மருந்து என்ற கொள்கையை எல்லா பெண்களும் கடைப்பிடித்து வந்தனர். வீட்டில் உள்ளவர் களின் உடல் தன்மையையும், அவர்களின் உடல் உபாதை களையும் பொருத்தே, அவர்களின் சமைக்கும் முறை அமைந் திருந்தது.

அகத்திக்கீரை மற்றும் அதன் பூ வயிற்று புண்களுக்கு சிறந்த மருந்து, உடல் வலி தோன்றினால், கண்டத் திப்பிலி ரசம், மூட்டு வலிகளுக்கு முடக்கந்தான் கீரை ரசம், தோகை, சளி இருமல் தோன்றினால் தூதுவளை, முசுமுசுக்கை கீரை அடை, மூல நோய் கண்டால் துத்திக் கீரை, கருணைக்கிழங்கு என உணவை மருந்தாக்கினார்கள். பெண்கள் பல உணவு மருந்துகளை தெரிந்து வைத்திருந்தனர். நோயை வரும் முன் காத்தனர்.

இன்று உணவு பதப்படுத்தப்பட்டு நம் நாட்டு தட்பவெட்ப நிலைக்கு சம்பந்தப்படாத பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் பலர் ஜீரண கோளாறுகளால் துன்பப்படுகிறார்கள். உடற்பருமன் மிக இயல் பான ஒன்றாகி விட்டது. நீரிழிவு நோய் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இளைஞர்களிடையே உயர் ரத்த அழுத்தம் இயல்பான ஒன்றாகி விட்டது.

நம் உடல் நலத்திற்கு பொருந்துமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முழு ஊட் டச்சத்து உணவு பொருட்களை திட்டமிட்ட முறையில் அளவாக உட் கொள்ள வேண்டும். மருந்துகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவிற்கு அளித்து சரியான சீரான அளவுகளில் உண்ண வேண்டும். இதைதான் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற உணவு சிகிச்சை.

***

இஞ்சி ஜாம்
1. இஞ்சி - 250 கிராம்
2. பேரீச்சம்பழம் விதை நீக்கியது - 250 கிராம்
3. சர்க்கரை அல்லது வெல்லம் - 250 கிராம்
4. நெய் - 100 கிராம்
5. தேன் - 100 கிராம்.
6. ஏலக்காய் - 25 கிராம் (பொடித்து கொள்ளவும்)

செய்முறை:
1. நல்ல திடமான இஞ்சியை தோல் சீவி நன்கு வேக வைத்து, பின் நன்கு மைபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. பேரீச்சம் பழத்தை சிறிது நெய்விட்டு வதக்கி இதை யும் நன்றாக அரைத்து கொள்ளவும்.
3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் (சர்க்கரை)யை இட்டு நன்கு இளக்கிய பின் அரைத்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பேரீச்சம்பழத்தை இட்டு நன்கு கிளறவும், ஏலக்காய் இட்டு சிறிது, சிறிதாக நெய்விட்டு கிளறி இறுதியில் சிறுதீயில் வைத்து தேன்விட்டு சுருண்டு வரும் வரை கிளறி ஆறவைத்து கண்ணாடி பாத்திரத்தில் பத்திரபடுத்தவும்.
இந்த ஜாமை, ரொட்டியில் வைத்து சாப்பிடலாம், காலை, மாலை ஒரு ஸ்பூன் சுவைத்து சாப் பிட்டு பால்குடித்து வரலாம்.
வயிற்றுக் கோளாறுகள், மார்பு வலி, ருசியின்மை, பசியின்மை, மலசிக்கல், வயிற்று உப்பு சம், வாய் நீருரல் ஆகிய பிரச்சினைகள் தீரும். பேரீச்சம்பழம் சேர்த்துள்ளதால் ரத்தத்தில் இரும்பு சத்து அதிகரிக்கும்.

***

மகத்துவம்
* இஞ்சியின் தோலில் நச்சுத்தன்மையிருப்பதால் தோலை நீக்கிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். காலை நேரத்தில் பயன்படுத்துவதே மிக நல்லது.

* இஞ்சியை ஒரு தேக்கரண்டி அளவிற்கு துருவி எடுத்து அதில் சிறிதளவு இந்துப்பூ அல்லது கல் உப்பு கலந்து, உணவு சாப்பிடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு நன்றாக மென்று சாப்பிட்டால் நன்றாக பசியெடுக்கும்.

*சளி, இருமல், சைனஸ், மூக்கடைப்பு இருப்பவர்கள் டீ, காபி பருகாமல் அதற்கு பதிலாக 2 தேக்கரண்டி இஞ்சி சாறு, ஒரு கப் சுடுநீர், சிறிதளவு தேன் ஆகியவைகளைக் கலந்து பருகவேண்டும். உடல்வலி, மூட்டுவலி, வாதவலி போன்றவைகளுக்கும் இஞ்சி சாறு சிறந்தது.

* நல்ல தேனில் இஞ்சியை நறுக்கிப்போட்டு தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட வேண்டும். ஒரு தடவை தயாரித்ததை பத்து நாட்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

***

100 கிராமில் இருக்கும் சத்துக்கள்
* நீர் சத்து- 80.9 கிராம்.
* புரோட்டீன்- 2.3 கிராம்.
* கொழுப்பு- 0.9 கிராம்.
* தாது சத்து- 1.2 கிராம்.
* நார் சத்து- 2.4 கிராம்.
* மாவுச் சத்து- 12.3 கிராம்.
* 100 கிராம் இஞ்சியில் 67 கலோரி இருக்கிறது.
* கால்சியம்- 20 மி.கிராம், பாஸ்பரஸ்- 60 மி.கிராம், இரும்பு சத்து- 2.7 மி.கிராம் அளவில் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் கப காலம், பித்த காலம், வாத காலம் என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. கப காலம் காலை 6 மணிக்கு தொடங்குகிறது. அதற்கு முன்பே படுக்கையில் இருந்து எழுந்தால் உடலில் சோர்வு ஏற்படாது. காலை உணவில் இஞ்சி சேர்த்தால், இஞ்சியில் இருக்கும் சத்துக்கள் உடலை ஜீரணத்துக்கு தயார் ஆக்கும். மதிய உணவில் சுக்கை சேர்த்தால் நன்றாக ஜீரணிக்கச் செய்யும். இரவு உணவில் கடுக் காய் சேர்த்தால் உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதோடு, மலச்சிக்கலையும் இல் லாமல் செய்திடும்.
=================================================================

1 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இஞ்சியின் பயனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துவிட்டீர்கள் கார்த்திக். நல்ல பதிவு

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner