Ads Header

Pages


18 March 2012

தெருமுனையில் முளைத்துக் கிடக்கும் சொறி, சிரங்கு மருந்து

தெருமுனையில் முளைத்துக் கிடக்கும் சொறி, சிரங்கு மருந்து!
குறிப்பு: நாஞ்சொல்லி இருக்கற பொருளுங்கள்ல பலதும் உங்க வீட்டுலயே இருக்கும். இல்லாட்டி, நாட்டுமருந்து கடையில கிடைக்கும்.
'குப்பையில் கிடந்த மாணிக்கம்'னு சொல்வாங்க. அது நம்ம மூலிகைகளுக்கும் பொருந்தும். உதாரணத்துக்கு குப்பைக் கீரையைச் சொல்லலாம். பேருக்கு ஏத்தமாதிரி குப்பைமேடுகள்லதான் இது வளரும். ஆனா, இதுக்கு உள்ள மகிமையே தனிதான். இந்த குப்பைக் கீரையை பூ பூக்குறதுக்கு முன்னாடி பறிச்சு... உப்பு, புளி, மிளகாய் வத்தல், பூண்டு, சீரகம் சேர்த்து, தண்ணி விட்டு அவிச்சி, கடைஞ்சி சாப்பிட்டா... மார்புவலி, அஜீரணக்கோளாறு எல்லாம் குணமாகும். குப்பையில கிடக்கறதுக்கு என்ன மகிமை பாத்தீங்களா?

இதேமாதிரி குப்பைமேனினு ஒண்ணைக் கேள்விப்பட்டிருப்பீங்க. இதுவும் குப்பைமேடுகள்ல தாராளமா வளர்ந்து கிடக்கும். மத்த இடங்கள்லயும் பார்க்கலாம். பொதுவா சொறி, சிரங்கு மாதிரி நோய் உள்ளவங்க, குப்பைமேனி இலையோட கொஞ்சம் உப்பு, மஞ்சள் சேர்த்து அரைச்சி பூசி, அரைமணி நேரம் கழிச்சி குளிக்கணும். இதை ஒரு சில நாளைக்குச் செய்தாலே... நல்லா குணம் தெரியும்.
மூல நோயைக் குணப்படுத்துற சக்தியும் இந்த குப்பைமேனிக்கு உண்டு. பூத்துக்கிடக்கற குப்பைமேனியை வேரோட பறிச்சுட்டு வந்து, நிழல்ல உலர்த்தி சூரணம் (பொடியாக்கி சலித்து வைப்பது) செஞ்சி வச்சுக்கிடணும். இந்த சூரணத்துல ரெண்டுல இருந்து அஞ்சு கிராம் அளவுக்கு எடுத்து, பசுநெய்யோட சேர்த்து, காலையிலயும், சாயங்காலமும் 48 நாள் சாப்பிட்டு வந்தா... எந்த வகையான மூலமும் குணமாகும். புளி, காரம் சேர்க்காம இருக்கணும். மோர் சேர்த்துக்கணும். இதைச் செய்தா... சீக்கிரம் குணமாகும்.
நாயுருவினு ஒரு மூலிகை இருக்கு தெரியுமா? சின்னப்பசங்க, விளையாட்டுத்தனமா... ஒருத்தர் மேல ஒருத்தர் தடவி விளையாடுவாங்க. இதோட இலையை கொட்டைப்பாக்கு அளவு எடுத்து அரைச்சி மோர்ல கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தா... சீதபேதி, ரத்தபேதி சரியாகும். நாயுருவி இலையை சாதிக்காயோட சேர்த்து அரைச்சு, தேமல் வந்த இடத்துல பூசிட்டு வந்தா... நோய் குணமாகும். நாயுருவி வேர்ல பல் துலக்கினா, பல்லுல இருக்கற கறை நீங்குறதோட, ஆட்டம் கண்ட பல் உறுதியாகும். வாய் நாத்தமும் அடிக்காது.

கானாவாழைனு ஒரு கீரை இருக்கு. இந்தக் கீரையோட துவரம்பருப்பு சேர்த்து கூட்டு செஞ்சு சாப்பிட்டா... மலச்சிக்கல் நீங்குறதோட உடல் உஷ்ணம் குறையும். வயசானவங்களுக்கு படுக்கைப் புண் வந்துடுச்சுனா... இந்தக் கீரை இலையை அரைச்சி, புண் வந்த இடத்துல பூசுனா... நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- இன்னும் சொல்றேன்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner