Ads Header

Pages


14 September 2013

கால்நடைகளுக்கு உதவும் மூலிகை மருத்துவம்

முன்னெச்சரிக்கைக்கு உதவும் மூலிகை மருத்துவம் !
கால்நடை மழைக் காலம் தொடங்கி விட்டாலே... காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டெங்கு என விதவிதமான நோய்கள் மனிதர்களை வாட்டி எடுக்கின்றன. கால்நடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல! இவற்றையும் பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் சிலரின் ஆலோசனைகள் இங்கே இடம் பிடிக்கின்றன.
நோய்களை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம்!
முதலில் பேசுகிறார்... மருத்துவர் புண்ணியமூர்த்தி (பேராசிரியர் மற்றும் தலைவர் -தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூர்).
''வெயில் காலத்திலிருந்து மழைக் காலத்துக்கு பருவநிலை மாறும்போது, கால்நடைகளுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, சுவாச சம்பந்தமானப் பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. தவிர, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு... வசிப்பிடங்களின் தன்மைக்கு ஏற்றவாறு கோமாரி, நீலநாக்கு நோய், கொள்ளை நோய், நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களும் வரலாம். அந்தந்தப் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாகவே இத்தைகைய நோய்களுக்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதனால் தவறாமல், தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.
தீவனம்... கவனம்!
பொதுவான சில பராமரிப்பு முறைகளையும் கடைப்பிடித்தால், மழைக் காலங்களில் நோய்த் தாக்குதலில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துவிட முடியும். மழை நேரங்களில் மாடுகள் சரியாக மேய்ந்து இரை எடுக்காது. அதோடு புதிய புற்களோடு முளைத்திருக்கும் களைகளையும் சாப்பிடுவதால், கழிச்சல் நோயும் வரலாம். அந்த மாதிரி நேரங்களில் அவ்வப்போது மாடுகளுக்கு தானியங்களையும், அடர்தீவனங்களையும் கொடுத்து சமாளிக்கலாம். திடீரென்று, அடர்தீவனங்களைக் கொடுக்கும்போது செரிமானப் பிரச்னைகள் வந்து விடும். எனவே, முன்கூட்டியே கொஞ்சம் கொஞ்சமாக அடர்தீவனங்களையும் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.
மழைக்காலங்களுக்குத் தேவையான சோளத்தட்டை, கடலைக்கொடி, வைக்கோல் போன்றவற்றையும் முன்பே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கோழிகள் உட்பட அனைத்துக் கால்நடைகளுக்கும் மூலிகை உருண்டைகளைத் தயாரித்துக் கொடுத்துவிட வேண்டும்.
கொசுக்களைவிரட்ட மூலிகை மூட்டம்!
மாலை நேரத்தில் இரும்புச் சட்டியில் மணலைக் கொட்டி கட்டை, கரி மூலம் நெருப்பு உண்டாக்கி... நொச்சி, பலா, எருக்கு, தைல மர இலை என அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய... ஆடு, மாடுகள் சாப்பிடாத மூலிகை இலைகளையும், சாம்பிராணியையும் போட்டு மூட்டம் போட்டால்... கொட்டகையில் கொசு தொல்லை இருக்காது. இதனால் பெரும்பாலான நோய்கள் பரவாமலும் தடுக்க முடியும்.
வருமுன் காப்போம்!
மழைக் காலங்களில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் வரும். இந்நோய்க்கான தடுப்பூசி கால்நடை மருந்தகங்களில் இலவசமாகவே போடப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல், அதைப் போட்டு வர வேண்டும். சுவாச சம்மந்தமான நோய்களும் இந்தக் காலத்தில் தாக்குதல் நடத்தும். மூலிகை உருண்டை கொடுப்பதன் மூலம் இவற்றை தடுத்து விடலாம். ஒருவேளை நோய் தாக்கி விட்டால்... மருந்துகள் மூலம் சரிப்படுத்தலாம்'' என்று சொன்னார் புண்ணியமூர்த்தி.
''மாடுகளை ஈரம் இல்லாத இடத்தில் கட்டுதல்; பசுந்தீவனத்தின் அளவை குறைத்து, உலர்தீவனத்தை அதிகப்படுத்துதல்; அடர்தீவனத்தில் தண்ணீரின் அளவைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். அதையும் தாண்டி கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகைகளைக் கொண்டே சரி செய்யலாம்'' என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த கால்நடை மூலிகை மருத்துவர் ராஜமாணிக்கம், அந்த மருந்துகளை வரிசையாகப் பட்டியலிட்டார் இப்படி-குளிர் காய்ச்சல் நோய்: வெங்காயம்-200 கிராம், மிளகு-10 கிராம், வெற்றிலை-5, சீரகம்-5 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து உள்ளே கொடுத்தால்... அரை மணி நேரத்திலே காய்ச்சல் குறைந்து விடும்.
ஜன்னி: மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வேப்பண்ணெயைத் தேய்த்து, சாம்பிராணிப் புகை போட்டு வந்தால், சரியாகி விடும். அல்லது குப்பைமேனி இலை-50 கிராம், சின்ன வெங்காயம்-25 கிராம் எடுத்துக் கொண்டு, இரண்டையும் அரைத்து... வெள்ளைத் துணியில் கட்டி மூன்று நாட்களுக்கு மூக்கு மற்றும் காதில் ஐந்து சொட்டும், கண்ணில் இரண்டு சொட்டும் விட்டு சாம்பிராணிப் புகை போட்டு வந்தால், சரியாகி விடும்.
கால் புண்: காலில் ஏற்படும் சேற்றுப் புண்ணுக்கு, ஓமவல்லி இலை-50 கிராம், வேப்பிலை-50 கிராம், புகையிலை-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து 2 முதல் 3 நாட்களுக்கு புண்ணில் தடவி வந்தால், சரியாகி விடும்.
கோமாரி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... துளசி-100 கிராம், விரலி மஞ்சள்-3 துண்டு, உப்பு 10 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து மூன்று உருண்டைகளாகப் பிரித்துக் கொண்டு, தினம் ஒன்று வீதம் மூன்று நாட்களுக்கு உள்ளே கொடுதால் கோமாரி அண்டாது.
கோமாரி நோய் தாக்கிவிட்டால், கால் கிலோ மருதாணி இலையை இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி ஆற வைத்து, இளம்சூட்டில் கால் மற்றும் வாய்ப்பகுதியில் புண் உள்ள இடங்களைக் காலை-மாலை வேளைகளில் கழுவி விட வேண்டும்.
மூன்று மஞ்சள் வாழைப்பழம், 100 மில்லி நல்லெண்ணெய் கலந்து பிசைந்து, 24 மணி நேரம் வைத்திருந்து கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் செய்தால்... நோயில் இருந்து மாடுகள் மீண்டுவிடும்.
ஆடுகளைத் தாக்கும் ஈரல் முட்டி நோய்: இந்த நோய் வெள்ளாடுகளை அதிகமாகத் தாக்கும். ஈரமான இடங்களில் கட்டுதல், சாணி, சிறுநீர்தேங்கிய இடங்களில் கட்டுதல் போன்றவற்றால் இந்நோய் தாக்கும். நோய் தாக்கிய ஆடுகள் குன்றிப்போய் விடும். ஒரு ஆட்டுக்கு 50 முதல் 70 கிராம் பருத்தி விதை என்ற அளவில், தினமும் ஒரு வேளை என ஏழு நாட்களுக்குக் கொடுத்தால், நோய் சரியாகி விடும்.
மூக்கடைப்பான்: 100 கிராம் கண்டங்கத்திரிப் பழத்தை (கறி முள்ளி) இடித்து வெள்ளைத்துணியில் கட்டி, ஒரு லிட்டர் ஆட்டுச் சிறுநீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, ஒவ்வொரு ஆட்டின் மூக்கிலும், 3 சொட்டுகள் வீதம் காலை-மாலை வேளைகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு விட்டு வந்தால் மூக்கடைப்பு சரியாகி விடும்.
படுசாவு (கத்தல் நோய்): மழை முடிந்து 10 நாட்கள் வரை... ஒன்றரை மணி நேரம் மேய்த்துவிட்டு, ஒரு மணி நேரம் மேய்ச்சல் இல்லாத இடத்தில் நிறுத்தி, செரிமானம் செய்ய விட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் மேய விட வேண்டும்.

வெள்ளைக்கழிச்சலுக்கு மருந்து!

கீழாநெல்லி-50 கிராம், சின்ன வெங்காயம்-5, பூண்டு-2 பல், மஞ்சள்-
5 கிராம், சீரகம்-20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து... அரிசிக் குருணை அல்லது நொய்யில் கலந்து தொடர்ந்து, 3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால்... வெள்ளைக் கழிச்சல் சரியாகி விடும்.
துளசி-20 இலை, தும்பை-10 இலை, கற்பூரவள்ளி-1 இலை, தூதுவளை-1 இலை, சீரகம்-5 கிராம், மஞ்சள்-5 கிராம், மிளகு-
5 கிராம், பூண்டு-5 பல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால்... சுவாச நோய் சரியாகி விடும். இது பத்து கோழிகளுக்கான அளவு.
கால்நடைக்கான மூலிகை உருண்டை!
பிரண்டை-100 கிராம், சோற்றுக் கற்றாழை-200 கிராம், நெல்லிக்காய்-2, முருங்கைக் கீரை-100 கிராம், கீழாநெல்லி-100 கிராம், கரிசலாங்கண்ணி-100 கிராம், குப்பைமேனி-100 கிராம், வேப்பங்கொழுந்து-100 கிராம், பூண்டு-5 பல், சின்ன வெங்காயம்-5 ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.
சீரகம்-20 கிராம், மிளகு-10 கிராம், மஞ்சள் தூள்-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
அரைத்தக் கலவை... இடித்தக் கலவை... இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அவற்றுடன் பனைவெல்லம்-200 கிராம் கலந்து சிறு சிறு உருண்டை பிடித்து, கல் உப்பில் தோய்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு மாட்டுக்கான அளவு. ஆடுகள் எனில்... ஐந்து ஆடுகளுக்குப் போதுமானதாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner