Ads Header

Pages


10 June 2012

எடை குறைக்க எளிய வழி....

டிப்ஸ்! எடை குறைக்க எளிய வழி....

அப்பப்பா.. இப்பவே நடக்க முடியல, படி ஏறி இறங்க முடியல, வயசாகிப்போச்சுல.. அதற்கு என்ன செய்ய விதிய கடனேன்னு கழிக்க வேண்டியதுதான்னு பேசுற சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கா? இப்பவே பெரிசு புலம்ப ஆரம்பிச்சிடுச்சு... வயசானா நமக்கும் இதே கதி தானா? இதற்கு என்ன தீர்வு வேற வழியே இல்லையா? ஏன் இல்லை. இதோ பிரமிக்க வைக்கும் எளிய வழிகள் - 18

வயது ஆக ஆகத்தான் நம் எல்லோருக்கும் வயது குறைந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஆசை வருகிறது. முப்பது வயதும், முதல் நரை முடியும் கொடுக்கிற அச்சம் மரணபயத்தைவிட சற்று அதிகம் என்பதே ஆச்சர்யமாகவும், அபாயகரமான உண்மையாகவும் இருக்கிறது. எடை மெலிந்தும், மனம் லேசாகவும் எப்போதுமே இருந்தால் என்ன? என்ற ஆசை உலகம் முழுக்க மக்களை தூண்டில் போடுகிறது. பியூட்டி பார்லர்களிலிருந்து, காஸ்மடிக் சர்ஜரிவரை முடிந்தவர்கள் முட்டிப் பார்க்கிறார்கள். பலர் நமக்கு இவ்வளவுதான் என்ற ஆறுதலில், எந்த முயற்சியையும் செய்யாமல் முதுமையின் அடையாளங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். வயது ஆனாலும் இளமையோடு இருக்க வழியே இல்லையா? அது ஜீன்களின் முடிவா என்று நடந்த சமீப ஆய்வுகள் 'இல்லை' என்ற சந்தோஷ செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றன. முதுமையின் அடையாளங்களை நமக்குக் கொண்டுவருவதில் 70 சதவிகித காரணங்கள் நம் வாழ்க்கை முறை என்கிறார்கள். அவற்றை சரி செய்தால் பத்து வயது குறைந்து இளமை சீட்டியடிக்கும் என்பதற்கு உத்திரவாதம் தருகிறார்கள். படியுங்கள்... பத்து வயதைக் குறையுங்கள்...!

இருபது வயதில் நீங்கள் இருந்த எடைக்குத் திரும்புங்கள்!

கடினமான முதல்வழி இது. ஆனால் இளமைக்கும், நீண்டநாள் வாழ்விற்கும் மிக முக்கியமான காரணம் - வழி இது என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு இளமையாகத் தோற்றமளிக்கிறீர்கள் என்பதற்கு ஒல்லியே நல்ல காரணம். அதிக எடையில் கொழுப்பு செல்கள் ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்து சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கிறது. தவிர, இந்த கொழுப்பு செல்கள் உடலில் 'சைட்டோகைன்' என்கிற வஸ்துவை அதிகரித்து அது இரத்தக் குழாய், இருதயம் உட்பட பல்வேறு உறுப்புகளைக் கெட்டியாக்கிவிடுகிறது. அதிக கொழுப்பு புற்றுநோய்களுக்கும் ஒரு காரணம். ஒல்லியானவர்களுக்கு முதுமையும், மரணமும் 75 சதவிகிதம் தள்ளிப்போடப்படுகிறது என்பதால், எடை குறையுங்கள். உங்கள் திருமண ஆல்பத்தை எடுங்கள்... குறுகுறு சிரிப்பில் முகப் பொலிவுடைய அந்த எடைக்குத் திரும்ப முயற்சியுங்கள்.

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிடுங்கள்!

இதன்மூலம் நம் உடலுக்குத் தேவையான சரியான வளர்சிதை மாற்ற வேகத்தை அடைய முடியும். சரியான எடையைப் பாதுகாக்க முடியும். முழு உடல் நலத்தை அடைய முடியும். சரியான குறைந்த உணவை ஐந்து மணி நேரத்திற்கு குறையாத இடைவெளியில் எடுத்துக் கொள்ளும்போது உடலின் மெட்டபாலிஸம் மென்மையாக இயக்க முடிகிறது என்கிறார்கள். தேவைக்கும் குறைவாக சாப்பிடுவதும் நல்லதல்ல. சரியாகச் சொன்னால், உணவு இடைவேளையில் 150 கலோரி ஸ்நாக் ஆரோக்கியமானது. நல்லது.

இருதயத்திற்கான உடற்பயிற்சிகளோடு எடை தூக்கும் உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள்!

நாற்பது வயதுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் 125 கிராம் தசை அளவு குறைந்து, அதற்குப் பதில் கொழுப்பு படிகிறது. எடை தூக்கும் பயிற்சிகளின் மூலம் இதைத் தடுக்க முடியும் என்கிறார்கள். ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடை தூக்கும் பயிற்சி செய்தால் போதும். கூடவே உறுதியான எலும்புகள், சர்க்கரை நோய் வருகிற வாய்ப்பு குறைவு, நல்ல தூக்கம் மற்றும் சிந்தனை எக்ஸ்ட்ராவாக வருகிற பலன்கள்.

மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள்!

உங்கள் உள்ளே வைத்திருக்கிற வெறுப்பு அல்லது எதிரி மனிதனுக்கு எதையுமே செய்ய விரும்பாத மனம் இரண்டும் முதுமையின் தோழர்கள் என்பதை உறுதி செய்யும் ஆய்வு முடிவை வில்லியம் ப்ரௌன் - சைக்காலாஜிஸ்ட் - ப்ருனல் பல்கலைக்கழகம் - லண்டன் - வெளியிட்டிருக்கிறார் 'dog eat dog world' என்கிற மனநிலையில்தான் பலர் வளர்கிறார்கள். ஆனால் அன்பும், கருணையும் கொள்வது ஆரோக்கியமாக வைத்திருக்கும் மிகப்பெரிய எளிய கருவி என்பதை எவரும் உணர்வதில்லை என்கிறார்.

நல்ல சண்டை போடுங்கள்!

பொதுவாக கணவன், மனைவிக்குள் நடக்கிற மோசமான சண்டைகள் இரத்தக் குழாய்களின் முதுமையைத் தொடங்கிவிடுகின்றன என்று ஓர் ஆய்வில் உட்டா பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. கணவன், மனைவிக்குள் சண்டை போடாமல் இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் எப்படி சண்டை போடுகிறீர்கள் என்பதே பாயிண்ட் என்கிறார்கள். மோசமான சண்டை போட்டு கிழவனாகவோ, கிழவியாகவோ ஆக வேண்டுமா என்று யோசியுங்கள்.

உங்களுக்கு வேதனை தரும் எதையும் நீண்ட நாட்களுக்கு மனதில் வைத்திருக்காதீர்கள்!

ஆய்வு முடிவுகளின்படி நீண்ட நாள் வலி, வேதனைகள் ஒரு கட்டத்தில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சரியாக இயங்க விடாமல் தடுத்து, ஆழ்ந்த மன இறுக்கம் உருவாகி, அதன்மூலம் மோசமான ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை அதிகப்படுத்துகிறது. இது சட்டென்று முகத்தில் முதுமைக்கு வரவேற்பு கொடுத்துவிடுகிறது. இது தேவையா என்று யோசியுங்கள். உங்கள் வேதனையை மிக நெருங்கியவர்கள் மூலமோ அல்லது உங்கள் மருத்துவர் மூலமோ உங்களிடமிருந்து நீக்குங்கள்.

அரைமணிநேரம் நடங்கள்!

உங்கள் இரத்தக் குழாய்கள் மெல்ல ஒரு எளிய பந்துபோல வளைய வேண்டும் என்றால், ஒரு அரை மணிநேரம் வேக நடை நடங்கள். ஒரு வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடந்தால் போதும். மனிதர்களின் இரத்தக் குழாய்களின் இளகு தன்மையை அல்ட்ராசவுண்ட் உதவியால் ஆய்வு செய்த டாக்டர் ஹிரோபியூமி - டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் - உறுதி செய்த தகவல் இது. வயது ஆக ஆக இரத்தக்குழாய்கள் பழைய டயர்போல இறுக்கம் கூடி மிருது தன்மை இழக்கின்றன. இதனைத் தடுத்தாலே உடல் முழுக்க இரத்த ஓட்டம் கூடி இளமை திரும்புகிறது.

ஒரு வளர்ப்பு பிராணியை கைக்கொள்ளுங்கள்!

வீட்டையும், இதயத்தையும் ஒரு செல்லப் பிராணிக்குத் திறந்துவிடுங்கள். இந்தச் செல்லப்பிள்ளைகளோடு நேரம் செலவிடுபவர்கள் மருத்துவமனைக்கு அடிக்கடி, செல்லாமல் எப்போதாவதுதான் செல்கிறார்களாம். மன அழுத்தத்தால் ஏற்படுகிற நோய்கள் இவர்களுக்குக் குறைவாகவே வருகிறது என்கிறார்கள். இரத்தக் கொதிப்பைத் தடுப்பதிலும், முதுமையைத் தடுப்பதிலும் இந்தச் செல்லப்பிராணி கொஞ்சல்கள் பயங்கரமாக உதவி செய்வதாகத் தெரிவிக்கிறார்கள்.

தோட்ட வேலை செய்யுங்கள்!

தோட்டமா? என்று சிரிக்கிறவர்கள் வீட்டில் ஒரு சின்ன ரோஜாச் செடியை வைத்துக் காப்பாற்றுங்கள். அறுவை சிகிச்சை முடிந்து ஜன்னல் வழி தெரிகிற ஒரு மரத்தைப் பார்க்கிறார்கள், சீக்கிரம் உடல் நலன் தேறுகிறார்கள். பார்த்தாலே இப்படி என்றால்?

மீன்களைச் சாப்பிடுங்கள்!

ஒமேகா 3 மற்றும் DHA இருக்கிற வகை மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடனடி இருதயச் செயலிழப்பு, ஹார்ட் அட்டாக், கண்பார்வை இழப்பு என பல முக்கிய அபாய கட்டங்களைத் தடுக்கின்றன. நல்ல கொழுப்பிலிருந்து மேலும் சில நல்ல பலன்களை அடைய கணோலோ ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். 2 கிராம் மீன் எண்ணெய் அதிக பலன்.

இசை கேளுங்கள்!

இரவில் நல்ல மனதுக்கு இதமளிக்கும் இசை கேட்பதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிக சக்தி பெறுகிறது. நோய் எதிர்க்கிற ISA என்கிற ஆன்டிபாடி இசை கேட்பதால் அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. பித்தோவனின் 'மிஸ்ஸா சால்ம்னிஸ்' கேட்கும் போது அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி 240 சதவிகிதமாம்.

கிரீன் டீ குடியுங்கள்!

ப்ராஸ்டேட் கான்ஸர், மார்பகப் புற்றுநோய் உட்பட மூன்று கப் கிரீன் டீ குடித்தால் நமக்குக் கிடைக்கிற ஹெல்த் பலன்கள் ஏராளம். அதிலும் கிரீன் டீயில் இருக்கிற பாலிபனால் இளமையின் திறவுகோல். ஆரம்பியுங்கள்.

வானவில்லைச் சாப்பிடுங்கள்!

சேர்த்தால் ஒரு வானவில்லின் வண்ணத்தைக் கொடுக்கும் பழங்களையும், காய்கறிகளையும் தினமும் இரண்டு கப் சாப்பிடுங்கள். நம்ப முடியாத இளமையைக் கொடுக்கக்கூடிய சக்தி இந்த காய்கனி பழங்களால் ஆன வானவில்லுக்கு உண்டு.

உணவில் மஞ்சள் சேருங்கள்!

மஞ்சள் என்பதில் 'குர்குமின்' என்கிற அதி அற்புத மந்திரம் ஒன்று அடங்கி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு, கேன்ஸர் எதிர்ப்பு உட்பட உடலைத் தளர்வடையச் செய்யும் ஃப்ரீ ரேடிகல்களை அழிக்கும் சக்தி கொண்டது.

வைட்டமின்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்!

500mg வைட்டமின் சி, 400 IOIU வைட்டமின் E, 800E துத்தநாகம், 15E பீட்டா கரோட்டின், 2E காலர் என்கிற அளவில் சில வைட்டமின்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவை முக்கியமாக கண்களைப் பாதுகாக்கின்றன. ஒளி படைத்த கண்களே இளமையின் அடிப்படை.

இரத்ததானம் செய்யுங்கள்!

ஒரு ஆரோக்கியமான மனிதன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம். உடலின் இரத்த உற்பத்தி பகுதிகள் சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் அடைந்து மறுபடியும் மறுபடியும் புதிய இரத்தம் உற்பத்தி ஆகும்.

வைட்டமின் 'E' சாப்பிடுங்கள்!

இது குறிப்பாக பெண்களுக்குத் தினமும் இரவில் 400E வைட்டமின் E எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் மற்றும் முடியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். 'I medeen' என்கிற பயோமெரின் மாத்திரை 50 வயது பெண்களிடம் நல்ல மாற்றத்தை உருவாக்குவதை ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஆழமான மூச்சை இழுத்து விடுங்கள்!

சாதாரண நிலை அல்லது டென்ஷன் என எப்போதும் சீரான இடைவெளியில் ஆழமான மூச்சை இழுத்து விடுங்கள். இதன்மூலம் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் குவிவது கட்டுப்படுத்தப்படுகிறது. தியானம், ஆழ்ந்த மூச்சு, எழுதுவது, என எதில் மனம் லேசாகிறதோ முதலில் அதைப்பற்றி மெல்லமெல்ல ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிக்கு வந்துவிடுங்கள். இது ஒரு இரண்டு நிமிடம்தான். இதனைக் கீழ்கண்டவாறு செய்யலாம்.

செய்யும்முறை:

முதலில் வாய்வழி சுத்தமான காற்றை வெளிவிடுங்கள். பின் மெதுவாக மூக்குவழி காற்றை உள்ளிழுங்கள் ஒன்றிலிருந்து நான்கு எண்ணும் வரை. பின் அந்தக் காற்றை அப்படியே ஒன்றிலிருந்து ஏழு எண்ணும் வரை நெஞ்சுக்குள் வைத்திருங்கள். பின் எட்டு எண்ணும் வரை வெளியிடுங்கள். அவ்வளவுதான். இதை மூன்று முறை செய்தால் போதும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner